சென்னை: இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் கணித்தமிழ் மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் பிப்ரவரி 8 தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பன்னாட்டு மாநாட்டில் ஏராளமான கணினி, மொழி ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளோடு பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடைபெற்றது.
நடப்பாண்டில் மொழித் தொழில்நுட்பங்கள் தொடர்பான முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிநவீனத் தயாரிப்புகள், திட்டங்கள், புதிய சிந்தனைகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் விதமாக 40 காட்சி அரங்குகள் மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஏராளமானோர் பார்த்துப் பயன் அடைந்தனர்.
‘தமிழ்இணையம்99’ மாநாட்டுக்குப் பிறகான காலகட்டத்தில் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது என்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து கடந்த நூற்றாண்டின் இறுதியிலேயே பேசத் தொடங்கிவிட்டாலும் அண்மைக் காலத்தில்தான் அது முழுவீச்சில் களம் கண்டிருக்கிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எனவே, வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் தமிழுக்கான இடத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநாடு நடத்தப்படுவதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் வழியாக, தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரிப்பதற்கான சூழலை ஏற்படுத்த இயலும் என்றும் புதிய தலைமுறையை இதன் பக்கம் திருப்ப இயலும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழறிஞர்கள், மொழித் தொழில்நுட்ப வல்லுநர்கள், மொழித் தொழில்நுட்பத்தை உருவாக்கும், பயன்படுத்தும் நிறுவனங்களைச் சேர்ந்த ஆளுமைகள் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் விரிவுரை வழங்கினர். ஆளுமைகளுக்கு இடையேயான குழு விவாதங்களும் நடத்தப்பட்டன.
செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கம், மொழி மாதிரிகள், நவீன மொழித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் உரைகளும் குழு விவாதங்களும் நடைபெற்றதாக மாநாட்டுக்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.
“உலகெங்கிலும் கணினித்தமிழ் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருபவர்களிடமிருந்தும், தமிழ் மொழி மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மொழி சார்ந்த மென்பொருள் உருவாக்குவோரிடமிருந்தும் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, புத்தகமாகத் தொகுக்கப்படும். இயற்கை மொழிச் செயலாக்கம், இயந்திர மொழிபெயர்ப்பு, பேச்சுகளைப் புரிந்துகொள்ளல், உணர்வுப் பகுப்பாய்வு உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும்,” என்றும் தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு மாநாட்டுக்கு வந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மொழி உணர்வில் தமிழ்நாடு எப்போதுமே சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கணித்தமிழ் மாநாட்டில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மொழியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றார்.