சென்னை: சென்னையில் தங்கி இருப்பவர்களும் கல்வி, வேலை காரணமாக வந்தவர்களும் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட பேருந்து, ரயில்களில் செல்ல முன்கூட்டியே ஆயத்தமாகி விடுவார்கள்.
அந்தவகையில், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு தொடங்கி இருக்கைகள் வேகமாக நிரம்பின.
இதையடுத்து, பொங்கல் சிறப்புப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட மிகவும் அதிகமாகக் காணப்பட்டது.
இந்த ஆண்டு, சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை ஐந்து நாள்கள் தொடர்ச்சியாக பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. பேருந்து, ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் விமானப் பயணத்தை நாடியுள்ளனர். அதனால் சென்னை விமான நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் விமானப் பயணக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துவிட்டது. குறிப்பாக, சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்வதற்கான விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளன.
சென்னை - தூத்துக்குடிக்கு வழக்கமான விமானக் கட்டணம் ரூ.3,624 என இருந்த நிலையில், சனிக்கிழமை அது ரூ.13,639ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல, சென்னை - மதுரை விமானக் கட்டணம் ரூ.3,367ல் இருந்து ஐந்து மடங்கிற்கு மேல் உயர்ந்து ரூ.17,262 என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,264ல் இருந்து ரூ.11,369ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.