சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர். ரஹ்மான். ஒரே படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ரஹ்மான், மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தார்.
1992ல் அறிமுகமானதிலிருந்து 30 ஆண்டுகளாக ஆச்சரியங்களைத் தந்து கொண்டே இருக்கிறார் ரஹ்மான். கடைசியாக 2003ஆம் ஆண்டில் தொடர்ந்து நான்கு நேரடித் தமிழ்ப் படங்களுக்கு இசை அமைந்திருந்த அவர், 2022ல் ‘இரவின் நிழல்’, ‘கோப்ரா’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பொன்னியின் செல்வன்’ என அடுத்தடுத்து நான்கு படங்களுக்கு இசையமைத்து இசைத் தொகுப்புகளாகப் பாடல்களைத் தந்தார்.
2023ம் ஆண்டும் பல தமிழ் படங்களுக்கு இசையமைத்து வியப்பை ஏற்படுத்தினார். தற்போது 2024ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் சில பெரிய குறைந்த செலவிலான படங்களுக்காகவும் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சனிக்கிழமை (ஜனவரி 6) பிறந்தநாள். இதனை முன்னிட்டு பலரும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலினும் ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ரஹ்மானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.