சென்னை: நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட நான்கு விழுக்காடு அதிகம் பெய்துள்ளது.
இம்முறை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் முதல் தேதியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை 458.9 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக 442.8 மில்லி மீட்டர் அளவிலான மழை மட்டுமே பெய்யும். இம்முறை இயல்பைவிட நான்கு விழுக்காடு அதிக மழை பெய்துள்ளது.
மாநிலத்தின் 17 மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள அணைகள், ஏரிகள், குட்டைகள் நிரம்பி வருகின்றன. எனினும் வரும் நாள்களில் மழை அளவு படிப்படியாக குறையும் எனத் தெரிகிறது.