சென்னை: கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் மிச்சாங் புயல், வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் பெரும் சேதங்களை எதிர்கொண்டனர்.
இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்பதற்கும் பாதிப்பை சீர்செய்யவும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடவும் தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நிதி வழங்கிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து, முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்.
இயற்கைப் பேரிடரின்போது, சவால்களை எதிர்கொண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டதற்காக தமிழக அரசுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.