சென்னை: மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
மிச்சாங் புயல், கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், பொதுமக்களின் வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், மின்சாதனப் பொருள்கள் உள்ளிட்ட உடைமைகள் சேதமடைந்தன.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண நிதிக்கான ‘டோக்கன்’ சனிக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே வியாழக்கிழமை ‘டோக்கன்’ வழங்கப்பட்டது.
அதோடு வரும் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் நியாய விலைக் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.