புவனகிரி: கடலூர் மாவட்டத்தின் புவனகிரி அருகே கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்தது. இதில் சுமார் 250 ஏக்கர் சம்பா பயிர் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
வடிகால் வாய்க்கால் முழுவதும் ஆகாயத் தாமரை பரவியிருப்பதால் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது.
“மழை காலத்துக்கு முன்னரே நீர்வளத்துறை அதிகாரிகள் இதனை அகற்றி இருக்க வேண்டும். கடன் வாங்கி விவசாயம் செய்யும் நிலையில் இது போல மூழ்கினால் என்ன செய்வது?” என்று இப்பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
“அரசின் திட்டமிடாத நடவடிக்கையால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி இப்பகுதி நீர் வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “மழை காலத்தை கணக்கிட்டு, புவனகிரி பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களிலும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் ஆகாயத்தாமரை மீண்டும் முளைவிட்டன என்று தெரிவித்தார்.