சென்னை: தமிழ் நாடு உயர்கல்வித்துறையும் ஜெர்மனியின் உயர்கல்வி நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இதுகுறித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்த திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள், `நான் முதல்வன்’ திட்டத்தை முதல்வர் ஆரம்பித்தார்.
“மேலும், மற்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் கல்வி சார்ந்த தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதன்படி சிங்கப்பூர், இங்கிலாந்து கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தற்போது ஜெர்மன் நாட்டுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்,” என்றார்.
நமது உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் திறனை வளர்த்துக் கொள்ளவும், வேலைவாய்ப்புகளைப் பெறவும் இந்த ஒப்பந்தம் உதவியாக இருக்கும்.
இந்த கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார். அதன்பின் உயர்கல்வித் துறை செயலர் ஏ.கார்த்திக், ஜெர்மன் நாட்டின் சாக்சோனி மாநில அமைச்சர் செபாஸ்டின் ஜெம்கோ ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன்மூலம் கல்வி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக ஜெர்மனியின் 12 பல்கலைக் கழகங்களுடன், தமிழக உயர்கல்வித் துறை இணைந்து செயல்பட உள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.