திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே இரு பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஆறு பேர் பலியாகிவிட்டனர். அறுபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு எதிர்பார்த்திருந்த வேளையில், இந்த விபத்து தமிழக மக்களைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சனிக்கிழமையன்று தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
பின்னர் அது சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு எதிர்த்திசையில் பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கர வேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் இரு பேருந்துகளின் முன்பகுதியும் நொறுங்கிப் போயின.
அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் காவல்துறையினரும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினரும் பின்னர் வந்து சேர்ந்து, படுகாயமடைந்த 64 பேரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இரு பேருந்துகளின் ஓட்டுநர்கள் உள்ளிட்ட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் மேலும் சிலர் உயிருக்குப் போராடி வருவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.