சென்னை: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற தலைப்பில் அடுத்த 50 நாள்களில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்துக்களைப் பெறுவதுதான் இலக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக கையெழுத்திட்டு இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
நீட் தேர்வுக்கு எதிரான இந்தக் கையெழுத்து இயக்கத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்கள்,– மாணவர்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“நீட் ஒழிப்புக்கான இந்த முன்னெடுப்பு, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்வுகளில், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்று கையெழுத்து இடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
“தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் காப்பதற்காக இடப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் மாண்புமிகு அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும்,” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திமுகவும் பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. திமுக சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்துள்ளார்.