சென்னை: சென்ட்ல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டி உணவகம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
அந்த ரயில் நிலையத்தின் முகப்பில் வாகன நிறுத்துமிடம் அருகே தனியார் பங்களிப்புடன் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்துக்கு உள்ளே 40 பேரும் வெளியில் நின்றபடி 110 பேரும் உணவருந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ரயில் பெட்டியின் மேற்கூரையில் அமர்ந்து சாப்பிட விரும்பினால் அதற்கும் வழியுண்டு. ரயில் மேற்கூரையில் 26 பேரும் அமர்ந்து உணவருந்த இயலும். திறக்கப்பட்டு இரு நாள்களே ஆன நிலையில், இந்த உணவகத்துக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
மிக விரைவில் பெரம்பூர், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.
இந்த உணவகங்களில் வரும் நாள்களில் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.