நெல்லை: நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நகலெடுக்கும் கடையின் பூட்டை மர்ம நபர் ஒருவர் உடைத்து அங்கிருந்த ஒரு கைப்பேசி, ரூ.1,500 ரொக்கம் ஆகியற்றைத் திருடிச் சென்றுவிட்டார்.
இது குறித்து கடையின் உரிமையாளர் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து அப்பகுதிகளில் கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தது.
அதில், தச்சநல்லூர் மேலக்கரைப் பகுதியைச் சேர்ந்த பழனிமுருகன் மகன் பரத் என்ற கார்த்திக், 19, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறை கார்த்திக்கை புதன்கிழமையன்று பிற்பகல் கைது செய்தனர்.
பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது கையில் விலங்கு மாட்டி நெல்லை அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனையில் இருந்த கூட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தி கார்த்திக் காவல்துறையின் பிடியிலிருந்து கைவிலங்குடன் தப்பி ஓடிவிட்டார்.
இதனால் மாநகரம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு முக்கிய இடங்களில் சோதனையில் நடத்தப்பட்டது. இதில் அவர் சிக்கவில்லை. காவல்துறையினர் கார்த்திக்கைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் மேலக்கரையில் உள்ள தனது வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அங்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். உடனே அவர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.