புதுடெல்லி: எதிர்வரும் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை இந்தியாவில் நடத்த விண்ணப்பிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான அனைத்துவிதமான கட்டமைப்புகளையும் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“உற்பத்தித் துறை முதல் சேவைத்துறை வரை அனைத்திலும் சாதித்து வரும் இந்தியாவால் விளையாட்டுத் துறையில் சாதிக்க இயலாதா?
“எனவே 2036ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சி தேவையில்லை என்று சொல்வதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை.
“விளையாட்டுத் துறை மேம்படுத்த இந்தியா இந்த அளவுக்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்கிறது எனில், ஒலிம்பிக் போட்டி மிகப்பெரிய அளவில் நம்மால் நடத்திக் காட்ட இயலும். ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு இதுவே உரிய நேரம்,” என்று அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா, இதற்கு முன்னர் ஆசிய, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டி உள்ளது.
2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவது தொடர்பாக பத்து நகரங்களுடன் தொடக்க நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. எனினும் எப்போது இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதற்கான கால அளவு எதையும் அது இன்னும் குறிப்பிடவில்லை.