தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் கிருமித்தொற்று எப்படி விலங்குகளுக்குப் பரவியது என்பதை நிர்ணயிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொவிட்-19 கிருமித் தொற்றுக்கு நீலா என்கிற ஒன்பது வயது பெண் சிங்கம் பலியாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 26ஆம் தேதி அன்று பூங்காவில் இருந்த ஐந்து சிங்கங்கள் சரியாக உணவு சாப்பிடவில்லை. மேலும் அவற்றுக்கு தொடர்ந்து இருமல் இருந்தது. கால்நடை மருத்துவ குழுவினர் 13 ஆசிய சிங்கங்களின் மாதிரிகளை சேகரித்து மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயிர் பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 13 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தது.
இதற்கிடையே பூங்காவில் சிங்கம் உலாவும் 2வது இருப்பிடத்தில் இருந்த 9 வயதான நீலா என்ற பெண் சிங்கம் திடீரென இறந்தது. அந்த சிங்கத்திற்கு மூக்கில் இருந்து திரவம் போல் தொடர்ந்து சுரந்து வந்துகொண்டிருந்தது.
இதையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்ற 12 சிங்கங்களும் தனித்தனியாக அடைக்கப்பட்டு உள்ளன. அதன் உடல் நிலை, நடவடிக்கை குறித்து கால்நடை மருத்துவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வரு கிறார்கள். இதில் சில சிங்கங் களுக்கு உடலில் எந்த அறிகுறியும் தென்படவில்லை. வழக்கமான நிலையில் இருப்பதாக பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாக மாலை மலர் நாளேடு தெரிவித்தது.
சிங்கங்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அதனை பராமரிக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப் பட்டு உள்ளது. இதன் முடிவு வந்த பின்னரே ஊழியர்களிடம் இருந்து விலங்குகளுக்கு நோய் தொற்று பரவியதா? என்பது தெரியவரும்.