நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஆனால் பல இடங்களில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக பரவலாக புகார்கள் வந்தன.
இந்த நிலையில், நாமக்கல் தொகுதிக்குட்பட்ட நரசிம்மர் கோவில் வாக்குச்சாவடிக்கு அருகே வசிக்கும் வாக்காளர்கள் நேற்றுக் காலை திமுக கட்சியினர் தங்கக் காசு டோக்கன் விநியோகம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக ஒரு வீட்டில் 5 வாக்குகள் இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டிற்கு ஒரு தங்க காசு டோக்கன் என்ற முறையில் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்து ஓட்டுக்கு டோக்கன் வினியோகம் செய்த தி.மு.க.வினரிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட தங்கக் காசு டோக்கன்களை வாங்கிக் கிழித்து எறிந்தனர். இந்த டோக்கனில் வாக்காளருடைய பெயர், முகவரி, குடும்ப அட்டை எண், செல்போன் எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் தங்ககாசு வடிவில் மாதிரி உருவம் பதிக்கப்பட்டிருந்தது. இந்த டோக்கன் வைத்திருந்த பையை அ.தி.மு.க.வினர் பிடுங்கி அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் வீசினர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் சூழ்நிலை உருவானது. அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து போலிசார் அங்கு விரைந்து வந்து இரண்டு கட்சிக்காரர்களையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.
தி.மு.க.வுக்கு வாக்களித்துவிட்டு அந்த டோக்கனை கொண்டு வந்து காண்பித்தால் தங்க நாணயம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என வாக்காளரிடம் கூறி தி.மு.க.வினர் விநியோகம் செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் அதிமுக தரப்பில் புகார் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.