சென்னை: வரும் 28ஆம் தேதி தைப்பூசம். தமிழ்க்கடவுளான முருகனின் அருள் வேண்டி கொண்டாடப்படும் தைப்பூச விழா உலகப் பிரசித்தி பெற்றது.
ஆண்டுேதாறும் இவ்விழாவன்று மலேசியா, இலங்கை, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் பொது விடுமுறை விடப்படுகிறது.
தமிழகத்திலும் தைப்பூசத்தன்று அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பலரும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வந்த நிலையில், இந்த ஆண்டு தைப்பூசத் திருநாளை பொது விடுமுறையாக அறிவித்து முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத்தன்று பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
“பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பதுபோன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திரு விழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்,” என்று தமது அறிவிப்பில் குறிப்பிட்ட முதல்வர், அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து பொது விடுமுறையை அறிவிப்பதாகக் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு முருக பக்தர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பாஜகவின் கோரிக்கையை ஏற்று தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவித்த முதல்வருக்கு நன்றி என தமிழக பாஜக தலைவர் முருகன் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.