பாரிஸ்: ஜெர்மனியின் பொருசியா டோர்ட்மண்ட் காற்பந்துக் குழு, 11 ஆண்டுகளில் முதன்முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (யுசிஎல்) போட்டியின் இறுதியாட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
பிரான்சின் பிஎஸ்ஜிக்கு எதிரான இரண்டாம் அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் டோர்ட்மண்ட் 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. இச்சுற்றின் முதல் ஆட்டத்திலும் அக்குழு பிஎஸ்ஜியை அதே கோல் எண்ணிக்கையில் வென்றது. அரையிறுதிச் சுற்றின் மொத்த கோல் எண்ணிக்கை 2-0 ஆகும்.
இரண்டாவது அரையிறுதிச் சுற்று ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டார் டோர்ட்மண்ட்டின் மேட்ஸ் ஹமல்ஸ். பிற்பாதியாட்டம் தொடங்கி ஐந்து நிமிடங்களில் ஹமல்ஸ் கோல் போட்டார்.
அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டம் டோர்ட்மண்ட்டின் சொந்த அரங்கில் நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் பிஎஸ்ஜியின் சொந்த அரங்கில் நடைபெற்றது.
பல கோல் வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியது பிஎஸ்ஜி.
இந்தப் பருவத்தின் சாம்பியன்ஸ் லீக் இறுதியாட்டம் இங்கிலாந்தின் வெம்பிளி அரங்கில் நடைபெறும். டோர்ட்மண்ட் கடைசியாக 2013ஆம் ஆண்டு இப்போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியபோதும் இறுதியாட்டம் வெம்பிளியில்தான் நடந்தது.
அதில் டோர்ட்மண்ட் தோல்வியடைந்தது.