லண்டன்: அடுத்த தலைமுறை காற்பந்து நிர்வாகிகளில் சாபி அலோன்சோ (படம்) சிறந்த நிர்வாகியாக விளங்குவார் என்று லிவர்பூல் பயிற்றுவிப்பாளர் யர்கன் கிளோப் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் காற்பந்தில் முத்திரைப் பதித்த அலோன்சோ ரியால் மாட்ரிட், லிவர்பூல் உள்ளிட்ட குழுக்களிலும் சிறப்பாக விளையாடி தலைசிறந்த வீரராக இருந்து பின் ஓய்வுபெற்றார்.
தற்போது அவர் ஜெர்மானிய காற்பந்து அணியான பயர் லெவகூசன் குழுவுக்கு நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். அவரது துடிப்பான நிர்வாகத்தன்மையால் லெவகூசன் அணி வெற்றி மேல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.
இந்தப் பருவத்துடன் லிவர்பூலைவிட்டுப் பிரியும் கிளோப்பின் இடத்தை அலோன்சோ நிரப்பலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“அலோன்சோ நன்றாக செயல்பட்டு வருகிறார், கடந்த இரு மாதங்களாக அவரின் நடவடிக்கைகள் பிரமிக்கவைக்கின்றன. தலைசிறந்த காற்பந்து வீரர் தற்போது தலைசிறந்த நிர்வாகியாக மாறுகிறார்” என்றார் கிளோப்.
லிவர்பூல் அணிக்கு அடுத்த பயிற்றுவிப்பாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் தாம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.