புடாபெஸ்ட்: ஹங்கேரியைச் சேர்ந்த முன்னாள் சீருடற்பயிற்சி வீராங்கனையான ஏக்னஸ் கெலெட்டி செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 9) தனது 103வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இவர், உலகளவில் உயிருடன் இருக்கும் ஒலிம்பிக் வெற்றியாளர்களில் ஆக மூத்தவர் ஆவார். முதலில் பின்லாந்துத் தலைநகர் ஹெல்சிங்கியில் நடைபெற்ற 1952ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கம் வென்ற கெலெட்டி, 1956ல் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் நான்கு தங்கப் பதக்கங்களை அள்ளினார்.
அத்தகைய சாகசங்களைத் தொடர்ந்து ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆகச் சிறப்பாகச் செய்த ஹங்கேரிய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் இவர்.
இரண்டாம் உலகப் போரின் கொடுமைகளை எதிர்கொண்ட கெலெட்டி, 1957ஆம் ஆண்டு இஸ்ரேலில் குடிபுகுந்தார். அங்கு சீருடற்பயிற்சிப் போட்டிகள் மேம்படுவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
கெலெட்டியை கெளரவிக்கும் வகையில் அவருக்குப் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஹங்கேரியில் வழங்கப்பட்ட ‘தேசத்தின் சிறந்த விளையாட்டு வீரர்’ விருதும் அவற்றில் அடங்கும்.