பாரிஸ்: யூரோ 2024 காற்பந்துப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற நடப்பு வெற்றியாளர் இத்தாலி, நெதர்லாந்து, வேல்ஸ் குழுக்கள் முனைப்புடன் உள்ளன.
யூரோ 2024 காற்பந்துப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதியிலிருந்து ஜூலை 14ஆம் தேதி வர ஜெர்மனியில் நடைபெறுகிறது.
தகுதிச் சுற்றுக்கான கடைசி இரண்டு ஆட்டங்கள் அடுத்த வாரம் நடைபெறுகின்றன.
அதிலிருந்து 12 குழுக்கள் நேரடியாகத் தகுதி பெறும்.
ஏற்கெனவே ஒன்பது குழுக்கள் தகுதி பெற்றுவிட்டன.
ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம், போர்ச்சுகல், துருக்கி, ஸ்காட்லாந்து, ஆஸ்திரியா ஆகியவற்றுடன் போட்டியை ஏற்று நடத்தும் ஜெர்மனியும் தகுதி பெற்றுவிட்டன.
இதற்கிடையே, நடப்பு வெற்றியாளரான இத்தாலிக்கு யூரோ 2024 போட்டிக்குத் தகுதி பெற முடியாத நிலை ஏற்படக்கூடும்.
வடமாசிடோனியாவையும் உக்ரேனையும் இத்தாலி சந்திக்கிறது. வடமாசிடோனியாவை இத்தாலி தோற்கடிக்கும் பட்சத்தில் உக்ரேனுக்கு எதிரான ஆட்டத்தில் சமநிலை கண்டால் போதும், யூரோ 2024க்குத் தகுதி பெற்றுவிடலாம்.
ஆனால் உக்ரேனிடம் தோல்வி அடைந்தால் யூரோ 2024ல் இத்தாலியால் களமிறங்க முடியாது.
அவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டால் இத்தாலிக்குப் பதிலாக உக்ரேன் தகுதி பெறும்.