பூனே: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 40வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
ஆட்டம் புதன்கிழமை மாலை 4:30 மணிக்கு பூனே விளையாட்டரங்கில் நடக்கிறது.
உலகக் கிண்ணத் தொடரில் இருந்து ஏற்கெனவே வெளியேறியுள்ள இங்கிலாந்து தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.
இந்த உலகக் கிண்ணப் போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே பாகிஸ்தானில் 2025ஆம் ஆண்டு நடக்கவுள்ள ‘சாம்பியன்ஸ் டிராபி’ போட்டியில் பங்கேற்க முடியும்.
தற்போது புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ள இங்கிலாந்து, நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டியக் கட்டாயத்தில் உள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய ஆறு அணிகள் ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டன.
தற்போது மீதமுள்ள இரு இடங்களுக்கு இலங்கை, பங்ளாதேஷ், இங்கிலாந்து, நெதர்லாந்து இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
நடப்பு வெற்றியாளராக இந்த உலகக் கிண்ணத்தில் நுழைந்த இங்கிலாந்து சாம்பியன்ஸ் டிராபி’ போட்டியில் பங்கேற்க முடியாமல் போனால் அது பெருத்த அவமானமாகப் பார்க்கப்படும் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.