லூட்டன்: லூட்டன் டவுனுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் தோல்வியின் விளிம்பிலிருந்து லிவர்பூலை மீட்டார் பெரும் சோகத்தில் தவித்துக்கொண்டிருக்கும் கொலம்பிய நட்சத்திரம் லூயிஸ் டியாஸ்.
லீக்கில் இதுவரை பெரிய அளவில் சிரமப்பட்டு வந்த லூட்டனுக்கு எதிராக எதிர்பாரா வகையில் 1-0 எனும் கோல் கணக்கில் தோற்றுக்கொண்டிருந்தது லிவர்பூல். 95வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார் டியாஸ்.
சில நாள்களுக்கு முன்பு கொலம்பியாவில் கடத்தப்பட்ட தனது தந்தையை விடுவிக்கக் கோரும் வகையில் டியாஸ் தனது கோலைக் கொண்டாடினார்.
‘தந்தைக்கு சுதந்திரம்’ என்ற பொருளைக் கொண்ட ஸ்பானிய வார்த்தைகள் அச்சடிக்கப்பட்ட சட்டையை வெளிப்படுத்தினார் டியாஸ். தனது சீருடைக்குக்கீழ் அந்தச் சட்டையை அணிந்திருந்தார்.
டியாசின் பெற்றோர் இருவரும் கொலம்பியாவின் இடது சாரி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டனர். காவல்துறை அவரின் தாயை மீட்டனர். ஆனால் டியாசின் தந்தை இன்னும் வீடு திரும்பவில்லை.
அவரை மீட்க கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இப்பிரச்சினை காரணமாக லிவர்பூலின் முந்தைய ஆட்டத்தில் டியாஸ் விளையாடவில்லை. பிரச்சினை தீராதபோதும் லூட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கியது மட்டுமின்றி தனது குழுவைத் தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவை 2-0 எனும் கோல் கணக்கில் வென்று திக்குமுக்காடச் செய்தது நொட்டிங்ஹம் ஃபாரஸ்ட்.
கடந்த சில ஆட்டங்களில் அபாரமாக விளையாடிய லில்லா, இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றிகாணும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வில்லாவை அதிக கோல் வாய்ப்புகளை உருவாக்க விடாமல் அசத்தியது ஃபார்ஸ்ட்.