மும்பை: உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 33ஆவது ஆட்டத்தில் இலங்கையை இந்தியா வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.
ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4.30 மணிக்கு மும்பை விளையாட்டரங்கில் நடக்கிறது.
இதுவரை ஆறு ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது (தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து போட்டிக்கு முந்திய நிலவரம்).
இந்நிலையில், இலங்கைக்கு எதிராகவும் இந்தியா வெல்லும் பட்சத்தில் அரையிறுதிச் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்துவிடும்.
இந்தியாவின் பந்தடிப்பும், பந்துவீச்சும் ஒன்றுக்கு ஒன்று நன்கு ஒத்துழைப்பு தருவதால் வீழ்த்த முடியாத அணியாகத் திகழ்கிறது.
அணித் தலைவர் ரோகித் சர்மா தொடர்ந்து ஓட்டங்கள் குவித்து அணிக்கு நம்பிக்கை தருகிறார்.
விராத் கோஹ்லி, கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா நிலைமைக்கு ஏற்ப ஓட்டங்கள் எடுப்பது அணிக்கு பலமாக உள்ளது.
ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் இன்னும் சீராக ஓட்டம் குவிக்கத் திணறுகின்றனர். அது பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.
ஹார்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீளாததால் அவர் இந்த ஆட்டத்திலும் அடுத்து தென்னாப்பிரிக்காவுடனான ஆட்டத்திலும் பங்கேற்கமாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மும்பை ஆடுகளம் பந்தடிப்புக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் பந்தடிப்பாளர்கள் அதிக அளவில் ஓட்டங்கள் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.
பந்து வீச்சில் முகம்மது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா கூட்டணி இங்கிலாந்தை நிலைகுலைய வைத்தது. அதே வேகத்தை இலங்கையிடமும் அவர்கள் காட்டக்கூடும்.
தொடரும் ஏமாற்றம்
உலகக் கிண்ணத் தொடர்களில் சிறப்பாக விளையாடக்கூடிய அணிகளில் இலங்கையும் ஒன்று. ஆனால் இம்முறை அந்த அணி தொடர் தோல்விகளால் போட்டியை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளது.
இதுவரை ஆறு ஆட்டங்களில் விளையாடியுள்ள இலங்கை இரண்டு ஆட்டத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மற்ற நான்கு ஆட்டங்களிலும் அது தோல்வியடைந்துள்ளது.
அனுபவம் இல்லாத ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இலங்கை.
ஓர் ஆட்டத்தில் பந்தடிப்பு நன்றாக இருக்கிறது, அடுத்த ஆட்டத்தில் மோசமாக உள்ளது. அதே நிலைதான் பந்துவீச்சிலும் தொடர்கிறது.
இந்த ஆட்டத்தில் இலங்கை தோற்றால் அதன் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோகும். அதனால் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக தனது முழுபலத்தையும் காட்டக்கூடும்.
இதற்கு முன்னர் இரு அணிகளும் செப்டம்பர் மாதம் ஆசியக் கிண்ண இறுதி ஆட்டத்தில் மோதின. அதில் இலங்கை அணி 50 ஓட்டங்களில் சுருண்டது.