இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரான இன்சமாம் அல் ஹக், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைத் தேர்வாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி போட்டியிட்டு வரும் நிலையில் அவர் பதவி விலகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமைத் தேர்வாளர் என்ற முறையில் அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட லாபம் ஈட்டும் நிலை அவருக்கு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து இன்சமாம் பதவி விலகியுள்ளார்.
பிரிட்டனை மையமாகக் கொண்ட யாசூ இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனத்தில் இன்சமாமின் இணை இயக்குநர்களில் ஒருவர் சாயா கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பதாக பாகிஸ்தானிய ஊடகம் தெரிவித்தது.
இந்த சாயா கார்ப்பரேஷன் நிறுவனம், பாகிஸ்தானின் சில முக்கிய கிரிக்கெட் நட்சத்திரங்களைப் பிரதிநிதிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் அணித் தலைவர் பாபர் அசம். பந்துவீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி, விக்கெட் காப்பாளர் முகம்மது ரிஸ்வான் ஆகியோர் அடங்குவர்.
“இந்த விவகாரம் குறித்து வெளிப்படையான, நியாயமான விசாரணையை நடத்த வாய்ப்பளிக்கும் வகையில் தலைமைத் தேர்வாளர் பதவியிலிருந்து விலகுகிறேன். நான் குற்றமற்றவன் என்று விசாரணைக் குழு தெரிவித்தால், மீண்டும் அப்பதவியை ஏற்பேன்,” என்று இன்சமாம் கூறினார்.