தோஹா: கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஃபார்முலா ஒன் கார் பந்தயம் இடம்பெற்றது.
கடுமையான வெயில் காரணமாக கார் பந்தய வீரர்கள் கதி கலங்கினர்.
உடலில் நீர்ச்சத்துக் குறைவு, வாந்தி, புழுக்கம், கவனக்குறைவு எனப் பல சவால்களை ஓட்டுநர்கள் எதிர்கொண்டனர்.
அல்பெயின் அணியின் எஸ்டபென் ஓக்கன் பந்தயத்தின் தொடக்கத்தில் வாந்தி எடுத்ததாகக் கூறினார். அஸ்டன் மார்டின் அணியின் லேன்ஸ் ஸ்டிரால் அசதியில் காரை விபத்துக்குள்ளாகி இருப்பேன் என்று குறிப்பிட்டார்.
வில்லியம்ஸ் அணியில் லோகன் சார்ஜன்ட் உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் பந்தயத்திலிருந்து பாதியிலேயே விலகினார். பந்தயத்திற்கு பிறகு அலெக்ஸ் அல்பான் வெப்ப பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இரவு நேர பந்தயத்தின்போது வெப்பநிலை 36 டிகிரி செல்சியசுக்குக் கீழ் குறையவில்லை. அதே நேரம் காலை நேரத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்கு மேல் இருந்தது.
காரினுள் அடுப்புக்குள் இருந்ததுபோல் இருந்ததாக பந்தயத்தில் வெற்றிபெற்ற ரெட்புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் தெரிவித்தார்.
உடல்வலிமையையும் மனவலிமையையும் சோதிக்கும் விதமாக கத்தார் பந்தயம் இருந்ததாக கவனிப்பாளர்கள் கூறினர்.