ஹாங்ஜோ: சீனாவின் ஹாங்ஜோவில் நடந்து வரும் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது.
போட்டியின் எட்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
3,000 மீட்டர் ஸ்டீப்பல் சேசில் அவினாஷ் சேபல் தங்கப்பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 8:19.53 நிமிடங்களில் ஓடி முடித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனையாகவும் இது அமைந்தது.
ஆண்கள் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
தஜிந்தர்பால் சிங் தூர் 20.36 மீட்டர் தூரம் வீசி பதக்கத்தைச் தட்டிச் சென்றார்.
பெண்களுக்கான 1,500 மீட்டர் தூர ஓட்டத்தில் ஹர்மிலான் பைன்ஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா மேலும் மூன்று பதக்கங்களை வென்றது.
ஆண்கள் துப்பாக்கிச் சுடுதலில் கைனன் டேரியஸ், பிரித்திவிராஜ் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.
ஆண்கள் தனிநபர் போட்டியில் கைனன் டேரியஸ் வெண்கலம் வென்றார்.
பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் குழுப்போட்டியில் ராஜேஷ்வரி குமாரி, கீர் மனிஷா, ரஜக் பிரீத்தி இணை வெள்ளிப்பதக்கம் வென்றது.
பெண்களுக்கான 50 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகத் சரீன் அரையிறுதிச் சுற்றில் 2:3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். அவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
இந்நிலையில், கபடிப் போட்டிகள் திங்கட்கிழமை முதல் தொடங்குகின்றன. அதில் இந்தியாவிற்கு தங்கம் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இந்திய கிரிக்கெட் அணி காலிறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.
செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி நிறைவுபெறும்.