ஹாங்ஜோ: இவ்வாண்டின் ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு அதன் முதல் பதக்கத்தை வென்று தந்துள்ளார் வூஷூ தற்காப்புக் கலை வீராங்கனை கிம்பர்லி ஓங். திங்கட்கிழமையன்று நடைபெற்ற பெண்களுக்கான சாங்சுவான் பிரிவில் ஓங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஸியாவ்ஷான் குவாலி விளையாட்டு மையத்தில் நடைபெற்ற போட்டியில் 9.756 புள்ளிகளைப் பெற்று ஓங் மூன்றாவது இடத்தில் முடித்தார். 9.786 புள்ளிகளைப் பெற்ற மக்காவைச் சேர்ந்த லி யி தங்கத்தைக் கைப்பற்றினார். அவருக்கு அடுத்த நிலையில் வந்தவர் ஹாங்காங்கின் லியு சுசு.
சிங்கப்பூரைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான ஸோயி டான் 9.753 புள்ளிகளைப் பெற்று நான்காம் நிலையில் வந்தார்.
ஓங் வென்றுள்ள வெண்கலப் பதக்கம், இதுவரை ஆசிய விளையாட்டுகளில் நடைபெற்றுள்ள அனைத்து வூஷூ போட்டிகளிலும் சிங்கப்பூர் கைப்பற்றியிருக்கும் ஏழாவது பதக்கம். இதற்கு முன்பு கடைசியாக 2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகளில்தான் வூஷூ போட்டியில் சிங்கப்பூர் பதக்கம் வென்றிருந்தது.
வூஷூ போட்டியின் சாங்சுவான் பிரிவில் அதை வென்றவர் டான் யான் நி.