லண்டன்: செல்சி காற்பந்துக் குழுவின் புதிய நிர்வாகியாக முதல் நாளிலிருந்தே தாம் திறம்படச் செயல்பட வேண்டும் என்று மௌரிசியோ பொக்கெட்டினோ கூறியுள்ளார்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் (இபிஎல்) தடுமாறிவரும் செல்சியின் உரிமையாளர்களின் நம்பிக்கையை தாம் வெல்லப்போவதாக பொக்கெட்டினோ சூளுரைத்துள்ளார்.
கடந்த மே மாதம் செல்சி நிர்வாகியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
செல்சியில் தமக்குக் காத்திருக்கும் இமாலய சவால் பற்றித் தமக்கு நன்றாகவே தெரியும் என்பதை பொக்கெட்டினோ புலப்படுத்தினார்.
கடந்த இபிஎல் பருவத்தின் இறுதியில் செல்சி 12வது இடத்தில் வந்தது. இபிஎல் பட்டியலில் அக்குழு கீழ்ப்பாதியில் பருவத்தை நிறைவு செய்திருப்பது 1996க்குப் பிறகு இதுவே முதன்முறை.
இபிஎல் பட்டத்தைக் கடைசியாக 2017ல் வென்ற செல்சிக்கு கடந்த பருவத்தில் மட்டும் நான்கு நிர்வாகிகள் வந்து சென்றுவிட்டனர். புதிய ஆட்டக்காரர்களை வாங்க £550 மில்லியன் (S$950 மி.) செலவு செய்தும் அக்குழு ஒரு கிண்ணத்தைக்கூட வெல்லவில்லை.
செல்சியை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டுசெல்வதில் பொக்கெட்டினோவுக்கு சவாலான பணி காத்திருக்கிறது. தாம் விமர்சனத்துக்கு ஆளாவதைத் தவிர்க்க, முதல் நாளிலிருந்தே தாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
“காற்பந்து விளையாட்டில் பொறுமைக்கு இடமில்லை. சிறந்த தருணத்திற்காக காத்திருப்பது கடினம். செல்சிக்கு வந்தால் நீங்கள் கால அவகாசம் கேட்க முடியாது. முதல் நாளிலிருந்தே வெற்றி இலக்குடன் செயல்பட வேண்டும்.
“காற்பந்து என்பது நேற்று அல்லது இன்று என்பதைப் பற்றியது. நீங்கள் நீண்டகாலத்தைப் பற்றிப் பேச முடியாது. எங்களுக்கு ஆறு மாதங்கள் தேவை என நீங்கள் கூற இயலாது.
“வெற்றிகளைக் குவிக்கக்கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர்,” என்று பொக்கெட்டினோ கூறினார்.