கேப்டவுன்: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1 முதல் 29 வரை டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீசிலும் நடக்கவிருக்கின்றன. இம்முறை மொத்தம் 20 அணிகள் அதில் பங்கேற்கின்றன.
அப்போட்டிகளில் பங்குபெறும் அணி வீரர்களின் பட்டியலை மே 1ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.
அவ்வகையில், செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 30) எய்டன் மார்க்ரம் தலைமையிலான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணி விவரம் வெளியிடப்பட்டது.
ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வரும் வேகப் பந்துவீச்சாளர் ஆன்ரிக் நோர்க்கியா, 30, அணிக்குத் திரும்பியுள்ளார். இதற்குமுன் அனைத்துலகப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாத பந்தடிப்பாளர் ரயன் ரிக்கல்டன், வேகப் பந்துவீச்சாளர் ஓட்னியல் பார்ட்மன் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பங்ளாதேஷ், நெதர்லாந்து, நேப்பாளம், இலங்கை ஆகிய அணிகளுடன் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது தென்னாப்பிரிக்கா. முதலாவதாக, அவ்வணி ஜூன் 3ஆம் தேதி நியூயார்க்கில் நடக்கும் போட்டியில் இலங்கையை எதிர்த்தாடவுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி விவரம்: எய்டன் மார்க்ரம் (அணித்தலைவர்), ஓட்னியல் பார்ட்மன், ஜெரால்ட் கோட்சியா, குவின்டன் டி காக், பியோன் ஃபார்ச்சுன், ரீசா ஹென்ரிக்ஸ், மார்க்கோ யான்சன், ஹென்ரிக் கிளாசன், கேசவ் மகராஜ், டேவிட் மில்லர், ஆன்ரிக் நோர்க்கியா, ககிசோ ரபாடா, ரயன் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.