மெல்பர்ன்: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் முதல்நிலை வீரர் ரஃபாயல் நடால் பங்கேற்பார் என்று அத்தொடரின் இயக்குநர் கிரெய்க் டிலீ தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டியில் இரண்டாம் சுற்று ஆட்டத்தின்போது இடுப்பில் காயமடைந்தார் நடால். அதன்பின் அவர் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், ஐந்து மாதங்களுக்கு விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, 2024 ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டியில் நடால் விளையாட இருப்பதாக டிலீ தெரிவித்தார்.
இதனிடையே, 2024ஆம் ஆண்டுடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து தான் ஓய்வுபெறலாம் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார் 38 வயதான நடால்.
ஆஸ்திரேலியப் பொது விருதில் இரண்டு முறை உட்பட மொத்தம் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை அவர் வென்றுள்ளார்.