மரின் பரேடில் புதன்கிழமை (பிப்ரவரி 14) ‘கோ அஹெட் சிங்கப்பூர்’ பேருந்தும் காரும் விபத்தில் சிக்கின.
காரில் பயணம் செய்த 21 வயதுப் பெண் ஒருவர் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மரின் பரேட் ரோடு - ஸ்டில் ரோடு சந்திப்பில் நடந்த விபத்து தொடர்பில் இரவு 9.55 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்தச் சாலைச் சந்திப்பிலிருந்து கறுப்பு நிற கார் ஒன்று இழுவை வாகனம் மூலம் இழுத்துச் செல்லப்பட்டதை விபத்தைக் கண்ட ஒருவர் பகிர்ந்துகொண்ட படங்கள் காட்டின.
காரின் முன்பகுதி மோசமாகச் சேதமடைந்திருந்தது. அதேபோல பேருந்தின் முன்பகுதியிலுள்ள முட்டுத்தாங்கியும் சேதமடைந்தது. வாகனங்களின் உடைந்த பகுதிகள் சாலையில் சிதறிக் கிடந்ததையும் காண முடிந்தது.
கார் ஓட்டுநருக்கு என்னவானது என்பது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் எதுவும் தெரிவிக்கவில்லை,
விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.