நண்பருடன் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்மீது கொதிக்கும் சூப்பை ஊற்றினார் பெண் ஒருவர்.
இதனால் அந்த ஆண் நண்பருக்குக் கடும் தீக்காயங்கள் ஏற்பட்டன.
திரு மார்ட்டின் போயே என்ற அந்த ஆடவருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை லிம் ஸி ஹுவி, 33, என்ற பெண் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) தீர்ப்பளித்தது.
அவருக்கான தண்டனை ஜனவரி 25ஆம் தேதி அறிவிக்கப்படும். அப்போது, லிம் திரு மார்ட்டினை அறைந்ததாகச் சுமத்தப்பட்டுள்ள மற்றொரு குற்றச்சாட்டும் கவனத்தில் கொள்ளப்படும்.
கடந்த 2022 ஏப்ரல் 19ஆம் தேதி, பிரின்செப் ஸ்திரீட்டிலுள்ள எஃப்எம்எல் மதுக்கூடத்தில் லிம்முக்கும் திரு மார்ட்டினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அப்போது, லிம்மின் கைப்பேசி சேதமடைந்ததாகவும் அதனையடுத்து கோபத்தில் அவர் திரு மார்ட்டினை அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்பின், இரவு உணவருந்துவதற்காக அருகிலிருந்த உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்றுவிட்டார் திரு மார்ட்டின்.
அங்கு சென்ற லிம், திரு மார்ட்டினின் உணவு மேசையில் இருந்த கொதிக்கும் சூப்பை அவர்மீது கவிழ்த்ததாகக் கூறப்பட்டது.
இதனால் திரு மார்ட்டினின் உடலில் 31 விழுக்காட்டிற்குத் தீக்காயம் ஏற்பட்டதாகவும் அவருக்கு 15 நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. சிறிது நேரத்திற்கு அவர் சுயநினைவை இழந்ததாகவும் கூறப்பட்டது.
இதனால், லிம்முக்கு ஐந்தரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்குமாறு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் சந்திரா அய்யாசாமி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
லிம் பெண் என்பதால் அவருக்குப் பிரம்படி விதிக்க முடியாது.