வாடிக்கையாளர்களைத் தீங்குநிரல் மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் யூஓபி வங்கியும் டிபிஎஸ் வங்கியும் தங்கள் செயலிகளில் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துகின்றன.
‘யூஓபி டிஎம்ஆர்டபிள்யூ’ செயலியில் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் புதன்கிழமையிலிருந்து (செப்.27) படிப்படியாக நடைமுறைக்கு வரும் என யுஓபி வங்கி தெரிவித்தது.
செயலியில் இத்தகைய பாதுகாப்பு அம்சங்களை முதலில் அறிமுகம் செய்த வங்கி என்ற சிறப்பு ஓசிபிசி வங்கியைச் சாரும்.
முதல் பாதுகாப்பு அம்சத்தின்கீழ், வங்கியின் செயலியைப் பயன்படுத்தும்போது, கைத்தொலைபேசித் திரைகளைப் பகிரும் செயலிகள் அல்லது கருவிகள் பயன்பாட்டில் இருந்தால் வாடிக்கையாளர்கள் யூஓபி வங்கியின் மின்னிலக்கச் சேவையைப் பயன்படுத்த முடியாது.
திரைகளைப் பகிரும் செயலிகளை அல்லது கருவிகளை முடக்கிய பிறகு, வாடிக்கையாளர்கள் வங்கிச் செயலியை மீண்டும் அணுக இயலும்.
வாடிக்கையாளர் தவறுதலாக கைத்தொலைபேசித் திரையை மோசடிக்காரர்களுடன் பகிர்வதைத் தடுக்க இது உதவும். மோசடிக்காரர்கள் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குத் தகவல்களை ஊடுருவாமல் இது தடுக்கிறது.
இரண்டாவது பாதுகாப்பு அம்சத்தின்கீழ், வாடிக்கையாளர் யூஓபி வங்கிச் செயலியை அணுகும்போது, மூன்றாம் தரப்பு அல்லது அங்கீகரிக்கப்படாத தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அபாயம் விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் இருந்தால், அவர் வங்கியின் மின்னிலக்கச் சேவையைப் பயன்படுத்த முடியாமல் அது தடுக்கிறது.
அபாயம் விளைவிக்கும் செயலி எதுவென்று வங்கிச் செயலி வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும்.
வாடிக்கையாளர் அந்தச் செயலிகளை முடக்கிய பிறகோ கைப்பேசியிலிருந்து நீக்கிய பிறகோதான் வங்கிச் செயலியைப் பயன்படுத்த முடியும்.
இந்தப் புதிய பாதுகாப்பு அம்சத்தினால் வாடிக்கையாளர்களுக்குச் சிரமங்கள் ஏற்பட்டாலும், தீங்குநிரல் மோசடிகளிலிருந்து பாதுகாக்க இத்தகைய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அவசியம் என்று யூஓபி வங்கி கூறியது.
இவ்வேளையில், டிபிஎஸ்/பிஓஎஸ்பி செயலியில் ஒரு புதிய தீங்குநிரல் பாதுகாப்பு அம்சத்தைப் படிப்படியாக அறிமுகப்படுத்த இருப்பதாக டிபிஎஸ் வங்கி தெரிவித்துள்ளது.
தீங்குநிரல் ஏதும் கண்டறியப்பட்டால், கைத்தொலைபேசியைப் பாதுகாக்கும்படி வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பு அனுப்பப்படும்.
புதிய பாதுகாப்பு அம்சங்கள், வாடிக்கையாளரின் கைத்தொலைபேசி நடவடிக்கைகளைக் கண்காணிக்காது. மேலும், அவர்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரிக்காது என வங்கிகள் உறுதிகூறியுள்ளன.