சிலேத்தார் விரைவுச்சாலையில் சென்ற புதன்கிழமை இரவு காரின்மீது மரம் விழுந்தது.
புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த காரின்மீது உட்லண்ட்ஸ் அவென்யூ 2 வெளிவழிக்கு அருகே அவ்வாறு மரம் விழுந்ததாகக் கூறப்பட்டது.
அந்த காரை ஒட்டியே பயணம் செய்த மூன்று மோட்டார் சைக்கிளோட்டிகள் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.
சம்பவம் குறித்து புதன்கிழமை இரவு 7.10 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சம்பவத்தையடுத்து ஒருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
எஸ்ஜி ரோடு விஜிலாண்டே யூடியூபில் பதிவேற்றிய காணொளியில் கறுப்பு காரின்மீது மரம் விழுவதையும் அவ்வேளையில் மூன்று மோட்டார் சைக்கிள்களோட்டிகள் அருகே பயணம் செய்ததையும் காண முடிகிறது.
மற்றொரு சம்பவத்தில், சுவா சூ காங் வேயில் வியாழக்கிழமை கார் ஒன்று தலைகுப்புறக் கவிழ்ந்தது.
அதை ஓட்டிச்சென்ற 63 வயது ஆடவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விபத்து குறித்து காலை 6.50 மணியளவில் தகவல் கிடைத்ததாக அது கூறியது.
மற்றொரு காரின் கேமராவில் பதிவான காணொளி எஸ்ஜிஃபாலோஸ்ஆல் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. சாலையின் வலது தடத்தில், பலத்த சேதமடைந்த கார் ஒன்று தலைகுப்புறக் கிடப்பதையும் அருகே தீயணைப்பு வாகனமும் அவசர மருத்துவ உதவி வாகனமும் நிற்பதையும் காண முடிகிறது.
இந்த விபத்து தொடர்பில் விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறை தெரிவித்தது.