நிதித் துறையில் நிர்வாகியாகப் பணிபுரியும் 58 வயது திருவாட்டி ஓங் சின் ஹோங்குக்கு பணத்தை நிர்வகிப்பதில் பரிட்சயம் உண்டு. இருப்பினும் நூல் இழையில் மோசடியில் சிக்குவதிலிருந்து தப்பித்தார். தம் சக ஊழியர் போன்று ஆள்மாறாட்டம் செய்து அவனது வர்த்தகத்துக்காக பணம் தேவை என தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்தது.
“உண்மையான சம்பவம் போன்றே இருந்தது,” என்று கூறிய திருவாட்டி ஓங், மற்ற சக ஊழியர்களிடம் பேசியபின் சந்தேகப் பட ஆரம்பித்தார்.
இனி வரும் மோசடி முயற்சிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஜனவரி மாதம் மத்திய சேமநிதி (மசேநி) வெளியாக்கும் பூட்டை முடுக்கினார்.
“தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மோசடிக்காரர்கள் என் திறன்பேசியிலிருந்து தகவல்களைத் திருடியோ மசேநி சேமிப்பில் கை வைத்துவிடுவார்களோ என்று கவலை அடைந்தேன். பாதுகாப்பை வலுவாக்கினேன்,” என்றார் அவர்.
மசேநி வலைத்தளம் மூலம் முடுக்கிவிடக்கூடிய இந்தப் புதிய அம்சம், இணையம் மூலம் சேமிப்பை வெளியேற்றும் சாத்தியத்தைத் தடுக்கிறது. மீண்டும் இணையம் மூலம் பணம் பெறும் வசதியைத் தொடங்க, மேம்பட்ட சரிபார்த்தல் அம்சத்துடன் 12 மணி நேரம் காத்திருப்பு காலத்திற்குப் பின் எடுத்துக்கொள்ளலாம். அல்லது மசேநி சேவை மையத்திற்குச் சென்று சேவையைப் பெறலாம். ஐந்து நாட்களில் வங்கிக் கணக்கில் பணம் போடப்படும்.
மோசடிகளிலிருந்து உறுப்பினர்களைப் பாதுகாக்க மசேநி கழகம், பணம் வெளியாக்கும் பூட்டு உட்பட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தியுள்ளது. 55வயது அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பணத்தை வெளியாக்க ஒரு நாளின் அதிகபட்ச வரம்பு $2,000 என்பதும் இந்த அம்சங்களில் ஒன்று. தொடர்புத் தகவல்களை மாற்றினால் 12 மணி நேர அவகாசமும் அதற்கு இடைப்பட்ட நேரத்தில் எவ்வித பரிவர்த்தனையும் செய்ய இயலாது என்பதும் புதிய அம்சங்கள்.
லாபம் கிடைக்கும் என்று வாக்குறுதி
மத்திய சேமநிதி (மசேநி) உறுப்பினர்கள் 55 வயதிலிருந்து அவர்கள் மசேநி சேமிப்புகளை வெளியாக்கிக்கொள்ளலாம். ஆனால் அவர்களின் ஓய்வுக்கால பொக்கிஷத்தைக் குறிவைக்கும் முதலீட்டு மோசடிகளிலிருந்து அவர்கள் கவனமாக இருக்கவேண்டும், என்று கூறினார் சிங்கப்பூர் காவல்துறையின் மோசடி பொதுக் கல்வி அலுவலகத்தின் உதவி இயக்குநர் காவல்துறை கண்காணிப்பாளர் மேத்தியூ சூ.
“இந்த வயதில் உள்ளவர்களின் மசேநி கணக்கில் உள்ள தொகை கணிசமாக இருக்கிறது. மோசடியில் சிக்குபவர்கள் எதிர்பார்ப்பை மிஞ்சிய லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதியால் ஈர்க்கப்படுவதே வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்,” என்றார் அவர்.முதலீட்டு மோசடிகள் பல வகைகளில் வரலாம் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு 4,000க்கும் மேற்பட்ட முதலீட்டு மோசடிச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதன்மூலம் $200மில்லியனுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் அண்மையில் வெளியிடப்பட்ட காவல்துறை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சராசரியாக ஒவ்வொரு சம்பவத்திலும் $50,700 இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகமாகப் பதிவான 10 மோசடி வகைகளில் இந்தத் தொகை இரண்டாம் நிலையில் உள்ளது. மசேநி கணக்கு சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்ட சம்பவங்களில் 1%க்கும் கீழ் இருந்தாலும், “மசேநி கழகம் இந்தச் சம்பவங்களைக் கூர்ந்து கவனித்து வருகிறது,” என்றார் மசேநி கழகத்தின் ஓய்வுக்கால பண வெளியேற்றப் பிரிவின் இயக்குநர் குமாரி ஸ்டெஃபனி இங்.
இந்த முயற்சிகள் மூலம் மோசடிக்காரர்களின் நடவடிக்கையை சற்று கடினமானதாக்கலாம் என்றும் இழப்புகளைக் குறைக்கலாம் என்றும் அவர் கூறினார். இருப்பினும், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் புதுப்புது மோசடி வகைகள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
“மசேநி கணக்கிலிருந்து பணத்தை வெளியாக்கி மிகவும் கவர்ச்சிகரமான லாபத்திற்காக முதலீடு செய்ய சொல்லும் நபர்கள் உங்களை நாடினால் கவனத்துடன் இருக்கவேண்டும்,” என்றார்.
மோசடிக்காரர்கள் தாக்கும் விதம்
- பொய் நண்பர்கள்
முதலில் நட்பு ரீதியாக உறவை வளர்த்து பின்னர் மின்னிலக்க நாணயம், நாணயச் செலாவணி போன்ற “முதலீட்டு வாய்ப்புகளை” வழங்குவது
- பொய் விளம்பரம்
“முதலீட்டு வாய்ப்புகள் என சமூக ஊடகத் தளங்களில் விளம்பரம் செய்து தனிப்பட்ட, வங்கி தரவுகளைக் கொண்டு கணக்கைத் திறக்கச் செய்தல்
- பொய் குழுக்கள்
போலியான முதலீட்டு வாய்ப்புகளையும் பொய்யான ஆதரவுக் குறிப்புகளையும் காட்டும் குறுஞ்செய்தித் தளங்களிலும் குழுக்களிலும் சேர்த்துக்கொள்ளுதல்
உங்கள் சேமிப்பை பாதுகாத்திடுங்கள்
- ஸ்கேம்ஷீல்டு செயலி, பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கவும்
ஸ்கேம்ஷீல்டு செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் சாதனங்களில் வங்கிகள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் ஆகியவற்றுக்கான இரண்டு அம்சம் உறுதிப்பாடு போன்ற பாதுகாப்பு வகைகளை அமைக்கவும். அண்மைய பாதுகாப்பு அம்சங்களுடன் சாதனங்களைப் புதுப்பித்து, வைரஸ் தடுப்பு செயலியை பதிவிறக்கவும். ‘மணி லாக்’. மசேநி வெளியேற்றும் பூட்டு போன்ற அம்சங்களை முடுக்கி மோசடிகளிலிருந்து உங்களை மேலும் பாதுகாத்திடுங்கள்.
- மோசடியை அடையாளம் காண அதிகாரபூர்வ வழிகளை நாடவும்
ஸ்கேம்ஷீல்டு வாட்ஸ்அப் போட் செயலியை go.gov.sg/scamshield-bot மூலம் பயன்படுத்துங்கள். மோசடித் தடுப்பு நேரடி உதவி எண் 1800-722-6688 அலுவலக நேரத்தில் அழையுங்கள். அல்லது scamalert.sg இணையத்தளத்தை நாடுங்கள். அதிகாரபூர்வ தளங்கள் வழி வழங்கப்படும் வேலை குறித்த நம்பகத்தன்மையை உறுதி செய்யவும். குறைந்த முயற்சிக்கு அதிக பணம் தருவதும் முதலில் பணம் கேட்கும் வேலை வாய்ப்புகளும் பெரும்பாலும் மோசடிகளாகத்தான் இருக்கும்.
- அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லவும்
நீங்கள் மோசடிகளை எதிர்நோக்கினால் அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள். மேலும் சந்தேகத்திற்குரிய கணக்குகள் அல்லது சுயவிவரங்களை அந்தந்த சமூக ஊடகத் தளங்களில் தெரிவித்து, அவற்றைத் தடுக்கவும். ஆக அண்மைய மோசடிப் போக்குகள் பற்றிய தகவல்களை உங்கள் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். அண்மைய மோசடி எதிர்ப்பு ஆலோசனைகளைப் பெற NCPC மோசடி எச்சரிக்கை வாட்ஸ்அப் சேனலைத் தொடரவும்.