பெருந்தொகை சம்பந்தப்பட்ட மோசடிகளில் சிங்கப்பூரர்கள் சிக்குவது குறித்து அரசாங்கம் மிகவும் கவலை கொண்டுள்ளதாக பிரதமர் லீ சீயன் லூங் கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் மோசடிகளில் சிக்குவோர் ஏறத்தாழ 660 மில்லியன் வெள்ளியை இழக்கின்றனர்; மோசடிகளில் சிங்கப்பூரர்கள் தினமும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வெள்ளியை இழப்பதாக ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதியன்று நடைபெற்ற நேர்காணலில் திரு லீ குறிப்பிட்டார். சீன ஊடகத்துடன் இஸ்தானாவில் அந்த நேர்காணல் நடந்தது.
தாமே ஒரு மோசடிக்கு ஆளானதாகவும் திரு லீ கூறினார்.
போலி இணையத்தளம் ஒன்றில் வாங்கிய பொருள் தமக்கு அனுப்பப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
“நான் மோசடிக்கு ஆளானேன்,” என்று அவர் சொன்னார். “அது உண்மையானது என நினைத்தேன். ஆனால் வாங்கிய பொருள் பல காலமாகக் கிடைக்கவில்லை.”
பின்னர் சம்பந்தப்பட்ட இணைய முகவரியைப் பார்த்தபோது அது en என்ற எழுத்துகளில் முடிந்ததாக அவர் தெரிவித்தார். en என்பது எஸ்டோனியா நாட்டைக் குறிக்கும்.
“அந்நாட்டின் விதிமுறைகள் நம்முடையவற்றைப் போல் இல்லாமல் இருக்கலாம்,” என்று கூறிய பிரதமர் லீ, “அல்லது மோசடிக்காரர்கள் அவர்களைப் போல் நடித்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?” என்றும் சுட்டினார்.
“இணையம் சுவாரசியமான ஒன்றாகத் தென்படலாம், ஆனால் அது பெரிய தலைவலியும்கூட,” என்றார் திரு லீ.
சிங்கப்பூரர்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் இணையத்தில் செயல்படுகின்றனர். பிறருடன் இயல்பான உறவைத் தொடர இணையத் தொடர்பு முக்கியம் என்றாலும் பொய்ச் செய்தி, டீப்ஃபேக் எனப்படும் தத்ரூபமாகத் தெரியும் போலிக் காணொளிகள் ஆகியவற்றால் உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாட்டை அறிவது சிரமமாகிவிட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.
ஒரு செய்தியின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்வதற்குக் கேள்விகள் கேட்க சிறுவர்களுக்குக் கற்றுத் தரப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
“லீ சியன் லூங் பிட்காய்ன் மின்னிலக்க நாணயம் விற்கிறார் என்ற செய்தியைப் பார்த்தால் அது சரிதானா என்பதை ஆராயவேண்டும். காரணம், நான் சரிவர இயங்கும் வேளையில் அது நிச்சயமாகப் பொய்யாகத்தான் இருக்கும்,” என்று திரு லீ விளக்கினார்.
திரு லீயின் அடையாளத்தை மோசடிக்காரர்கள் பலர் பயன்படுத்தியிருக்கின்றனர். அதுபற்றி சிலர் அவருக்குத் தெரியப்படுத்தித் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
ஊடகங்களும் தவறுதலாகப் பொய்ச் செய்தி வெளியிடுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று திரு லீ கூறினார். மோசடிக்காரர்கள் புதிய, மேலும் சிறப்பான ஏமாற்று உத்திகளைக் கண்டுபிடித்துச் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இது என்றும் மாறிக்கொண்டிருக்கும் பிரச்சினையாகும். எல்லா வேளைகளிலும் இப்பிரச்சினையைக் கையாள நம்மிடம் திட்டம் இருக்காது,” என்றார் அவர். “இதை எப்போதும் கையாளவேண்டும். மற்ற நாடுகளும் இதே சவாலை எதிர்நோக்குகின்றன,” என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரில் மோசடிகளைப் பற்றி காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் இப்பிரச்சினையைக் கையாளமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.