பீச் ரோட்டில் உள்ள சிட்டிகேட் ரெசிடென்சஸ் கூட்டுரிமைக் குடியிருப்பில் 56 வயது ஆடவரைக் கொன்றதாகப் பெண் ஒருவர் மீது மே 9ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.
மே மாதம் 8ஆம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் திரு லிம் லாய் குவானைச் சீன நாட்டவரான 37 வயது லீ யே கொன்றதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் காதலர்கள் என்று நம்பப்படுகிறது.
லீ, காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். மாண்டரின் மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு அவர் நீதிபதியிடம் பேசினார்.
“நான் அவரைத் திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை. கொலை செய்யும் நோக்கம் இல்லாது மரணம் விளைவித்ததாக இந்த வழக்கை வகைப்படுத்த வேண்டும்,” என்றார் அவர்.
சம்பவ இடத்திலிருந்து கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
காயமடைந்த திரு லிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
லீ, மத்தியக் காவல்துறைப் பிரிவில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மே 16ஆம் தேதி நடைபெறும்.
கொலைக் குற்றம் நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.