பிரதமர் என்ற முறையில் திரு லீ சியன் லூங், நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட இறுதி நாளில் அவருக்குச் சிறப்பு அன்பளிப்பு ஒன்று காத்திருந்தது.
பிரதமர் லீக்கு, மே 8ஆம் தேதி, தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட முப்பரிமாண கேக் ஒன்று, நாடாளுமன்றத்தில் பரிசளிக்கப்பட்டது.
வெஸ்ட்கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் ஓங், “பிரதமர் என்ற முறையில் திரு லீ நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட இறுதி நாளில் மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தோம்.
“பிரதமர் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மக்கள் செயல் கட்சியின் மகளிர் பிரிவினர் அவருக்கு கேக் ஒன்றைப் பரிசளித்தோம்,” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
ஷங்ரி-லா சிங்கப்பூர் ஹோட்டலின் சமையற்கலை வல்லுநர் எர்வே போட்டசுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட அந்த கேக், திரு லீயின் 20 ஆண்டுகாலத் தலைமைத்துவத்தைச் சிறப்பிக்கும் விதமாக, அவருக்குப் பிடித்தமான சில அம்சங்களைக் காட்சிப்படுத்தியது.
‘மீ சியாம்’ கிண்ணமும் கணிதம், கணினி நிரல் எழுதுதல், தொழில்நுட்பம், அரசியல் ஆகியவை தொடர்பான புத்தகங்களும் அவற்றில் அடங்கும்.
கேக்கில் ஹோக்கியன் மொழியில் ‘பிரதமருக்கு நன்றி’ எனப் பொருள்படும் வாசகமும் பொறிக்கப்பட்டிருந்தது.
“தனித்துவமிக்க தலைமைத்துவம் வகித்த பிரதமருக்கு நன்றி! தொடர்ந்து மூத்த அமைச்சராகப் பணியாற்றுவதற்கு நன்றி,” என்று திருவாட்டி ஓங் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.