மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்ட 1.6 டன் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்களை சிங்கப்பூர் உணவு அமைப்பு கைப்பற்றியுள்ளது. குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்துடன் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் அந்தக் காய்கறிகள் சிக்கின.
சிங்கப்பூர் உணவு அமைப்பும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் இணைந்து மே 8ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டது.
சட்ட விரோதமாக சிங்கப்பூருக்குள் காய்கறிகள் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் வகையில் மே 2, 3 ஆகிய தேதிகளில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் கனரக வாகனங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. அப்போது இரண்டு வாகனங்களில் ஏற்றப்பட்டிருந்த சரக்குகள் சந்தேகத்திற்கு இடமளித்ததால் அந்த வாகனங்களை மேலும் சோதனையிடும்படி குடிநுழைவு அதிகாரிகள் உணவு அமைப்புக்குப் பரிந்துரைத்தனர்.
அவ்வாறு சோதனையிடும்போது, அந்த வாகனங்களில் கீரை, பாகற்காய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட 1.6 டன் எடையுள்ள காய்கறிகள், உணவுப் பொருள்கள் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்படுவது தெரியவந்தது. அதையடுத்து அனைத்துப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிங்கப்பூர் உணவு அமைப்பு விசாரணையைத் தொடர்ந்துள்ளது.
சிங்கப்பூரில், பழங்கள் மற்றும் காய்கறிகள், உணவுப்பொருள்களை உரிமம் பெற்ற இறக்குமதியாளர்களால் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும், மேலும் ஒவ்வொரு சரக்குகளும் சரியான இறக்குமதி அனுமதியுடன் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியது.
அனுமதியின்றி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அவ்வாறு பயன்படுத்தப் பட்டிருந்தால் அது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தகுந்த அனுமதிச் சான்றிதழ் இன்றி காய்கறி, பழங்களை இறக்குமதி செய்யும் குற்றவாளிகளுக்கு $10,000 வரை அபராதமும் மூன்று ஆண்டுகள் வரை சிறையும் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.