‘மெட்டா’ போன்ற இணையத்தளங்களின் ஊழியர்களைக் காவல்துறையின் மோசடித் தடுப்புப் பிரிவில் பணியமர்த்துவதைக் கட்டாயமாக்கும் நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சு பரிசீலிக்கும் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
‘ஆஸ்காம்’ எனப்படும் மோசடித் தடுப்புத் தளபத்தியத்தில் அவர்கள் பணியமர்த்தப்படுவர்.
அவ்வாறு அந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டபோது, மோசடியில் தொடர்புடைய கணக்குகளை அவர்களின் தளங்களிலிலிருந்து விரைவாக அகற்றுவது காவல்துறைக்கு எளிதாக இருந்தது.
நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெர்ரிக் கோ, மின்வர்த்தகத் தளங்களில் மோசடித் தடுப்பு நடைமுறைகளை மேம்பட்ட முறையில் கற்றுக்கொள்வதற்கு அமைச்சு எவ்வாறு உதவக்கூடும் என்று எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அமைச்சர் சண்முகம் அவ்வாறு கூறினார்.
‘கேரசல்’, ‘ஷாப்பி’ ஆகிய இணைய விற்பனைத் தளங்கள், 2024ன் முதல் காலாண்டிலிருந்து அவற்றின் ஊழியர்களை ‘ஆஸ்காமில்’ பணியமர்த்தியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
‘மெட்டா’ இணையத்தளம் அதன் மோசடித் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுக்குப் பிறகு அதன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளதா என்றும் திரு கோ கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் சண்முகம், இணையவழிக் குற்றவியல் தீங்குகள் சட்டத்தின்கீழ் செய்யப்பட வேண்டியவை குறித்துத் தாம் வழக்கமான இடைவெளியில் ‘மெட்டா’ நிறுவனத்துடன் பேசுவதாகக் கூறினார்.
இவ்வாண்டுப் பிற்பகுதியில் இதன் தொடர்பான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபின், அவற்றுக்குப் பொருத்தமாக நடந்துகொள்ளாத இணையச் சேவைத் தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்றார் அவர்.