பாலஸ்தீனம் குறித்து மார்ச் 24ஆம் தேதி ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவின் தொடர்பில் சிங்கப்பூருக்கான இஸ்ரேலியத் தூதரக அதிகாரி இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம், மே 8ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.
அந்த ஃபேஸ்புக் பதிவில், இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனில் இஸ்ரேல் 43 முறை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் பாலஸ்தீனம் குறித்து ஒரு குறிப்பும் இல்லையென்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் யூதர்கள்தான் அந்த மண்ணின் மைந்தர்கள் என்பதற்குத் தொல்லியல்பூர்வமான ஆதாரம் இருப்பதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் மார்ச் 24ஆம் தேதி மாலை அது நீக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய அப்பதிவு குறித்து சிங்கப்பூருக்கான இஸ்ரேலியத் தூதர் அண்மையில் தம்மை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியதாகவும் இனி எப்போதும் இதுபோல் நடைபெறாது என்று உறுதியளித்ததாகவும் அமைச்சர் சண்முகம் நாடாளுமன்றத்தில் கூறினார்.
அந்தப் பதிவு குறித்துக் காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டதாகவும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திடம் அதன் தொடர்பில் ஆலோசனை பெறப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். காவல்துறையும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் கூடுதல் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
“இஸ்ரேலியத் தூதரிடம், சொந்தக் கருத்துகளைக் கொண்டிருப்பதற்குத் தூதரகங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் சொல்லப்பட்டக் கருத்து சிங்கப்பூரைப் பாதிப்பதாக அமைந்துள்ளது என்பதைச் சுட்டினேன்.
“இந்த விவகாரத்தில், சிங்கப்பூரின் நல்லிணக்கத்தையும் உள்நாட்டுப் பாதுகாப்பையும் அது பாதிக்கிறது. குறிப்பாக சிறுபான்மைச் சமூகத்தினரின் பாதுகாப்பை அது பாதிப்பதால் நாங்கள் தலையிட வேண்டியுள்ளதாகக் கூறினேன்,” என்று திரு சண்முகம் சொன்னார்.
சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் அதைப் பதிவிட்ட அதிகாரி அரசதந்திர ரீதியில் பாதுகாக்கப்படுகிறாரா என்றும் சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
வெளிநாட்டுத் தூதரகங்களும் அரசதந்திர அலுவலர்களும் அரசதந்திர ரீதியாக, குற்றவியல் சட்ட நடவடிக்கையிலிருந்து பாதுகாக்கப்படுவதாக அவர் கூறினார்.