தெம்பனிஸ் அவென்யூ 4க்கும் அவென்யூ 1க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் ஏப்ரல் 22ஆம் தேதி 6 வாகனங்கள் மோதிக்கொண்டு பெரிய விபத்து ஏற்பட்டது.
அதில் தொடக்கக்கல்லூரி மாணவியான 17 வயது அஃபிபா முனிரா முகம்மது அஸ்ரில், 57 வயது திருவாட்டி நூர்ஸிஹான் ஜுவாஹிப் ஆகியோர் மாண்டனர்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் இதற்கு முன்னர் எத்தனை விபத்துகள் நடந்துள்ளன,அதில் யாரேனும் மாண்டனரா என்று மே 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 கேள்விகளை கேட்டனர்.
அதற்கு பதிலளித்த போக்குவரத்து மூத்த துணையமைச்சர் ஏமி கோர், “இதற்கு முன்னர் விபத்து நடந்த சந்திப்பில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கு எந்த புகார்களும் வரவில்லை, அந்தச் சந்திப்பு அனைத்துலகப் பாதுகாப்புத் தரநிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது,” என்றார்.
விபத்து நடந்த தெம்பனிஸ் சந்திப்பில் 2019 - 2023ஆம் ஆண்டு வரை உயிரிழப்புகள் இல்லை என்றும் மோசமான விபத்துகள் பதிவாகவில்லை என்றும் டாக்டர் ஏமி கோர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் 2019ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மரணம் ஏற்படுத்திய பெரும்பாலான விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவும் வாகனத்தைக் கட்டுப்படுத்த தவறியதுமே காரணம் என்று உள்துறை துணையமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் தெரிவித்தார்.
தெம்பனிஸ் விபத்து பல சிங்கப்பூர்களுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கியது என்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.
ஆண்டிற்கு சராசரியாக மூன்று உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய விபத்துகள் வாகனத்தை கண்மூடித்தனமாக ஓட்டுவதன்கீழ் விசாரணைக்கு வருவதாக டாக்டர் ஃபைஷல் குறிப்பிட்டார்.
ஆண்டிற்கு சராசரியாக 29 உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய விபத்துகள் வாகனத்தை வேகமாக செலுத்துவதால் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 117 பேர் மாண்டனர். ஆனால் 2023ஆம் ஆண்டு அது 131ஆக அதிகரித்தது. இது கிட்டத்தட்ட 12 விழுக்காடு அதிகம் என்று டாக்டர் ஃபைஷல் கூறினார்.
சாலை விதிமீறல்கள் தொடர்பாக 2019ஆம் ஆண்டு முதல் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தண்டனைகள் குறித்து அடிக்கடி மறுஆய்வு நடத்தப்படும் என்று டாக்டர் ஃபைஷல் தெரிவித்தார்.