சிங்கப்பூரில் எலிகள், பல்லிகள் ஆகியவற்றை அழிக்கப் பயன்படுத்தப்படும் பசை தடவிய பொறிகளில் உள்ளூர் வனவிலங்குகள் சிலவும் சிக்கிக்கொள்வதுண்டு.
2014ஆம் ஆண்டு முதல் அவ்வாறு சிக்கி, மீட்கப்பட்ட விலங்குகளில் 25 விழுக்காட்டு விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களாக அறிவிக்கப்பட்டவை. மீன்கொத்திப் பறவை, வௌவால் போன்றவையும் அவற்றில் அடங்கும்.
பொறிகளில் உள்ள பசை, அவற்றில் சிக்கிய விலங்குகளை நகரவிடாமல் தடுப்பதால் அவை நீண்ட நேரம் துன்புறுகின்றன. பட்டினி, நீர்ச்சத்துப் பற்றாக்குறை, மூச்சுத் திணறல் ஆகியவற்றால் மாண்டுபோகின்றன.
இத்தகைய பசை தடவிய பொறிகளின் தீங்கு குறித்து 20 விழுக்காட்டுக்கும் குறைவானோருக்கே விழிப்புணர்வு இருப்பதாக ‘ஏக்கர்ஸ்’ எனும் விலங்கு நல ஆய்வு, கல்விச் சங்கம் நடத்திய அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
2014ஆம் ஆண்டுக்கும் 2023க்கும் இடையில், பொறிகளில் சிக்கிய கிட்டத்தட்ட 1,910 விலங்குகளை மீட்டதாக ‘ஏக்கர்ஸ்’ கூறியது. மற்ற விலங்கு நல அமைப்புகளும் விலங்குநல மருந்தகங்களும் கையாண்ட சம்பவங்களையும் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்று அது சொன்னது. சில சம்பவங்கள் பதிவு செய்யாப்படாமலும் இருக்கக்கூடும் என்று ‘ஏக்கர்ஸ்’ கூறியது.
வீடுகளிலும் அலுவலக, தொழிற்சாலை வளாகங்களிலும் தொல்லை தரும் பூச்சிகள், விலங்குகளைக் களைய பசை தடவிய பலகைகள் பொறிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சென்ற ஆண்டுப் (2023) பிற்பாதியில் நடத்தப்பட்ட கருத்தாய்வில் 1,000 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் 61 விழுக்காட்டினர் உயிருடன் பிடிபட்ட எலியை அந்தப் பொறியோடு வீசிவிடுவோம் என்று கூறினர்.
வனவிலங்குகள் பிடிபட்டால் அவற்றைக் குப்பையில் வீசிவிடுவோம் என்று கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் கூறினர். 10 விழுக்காட்டினர் மட்டுமே விலங்குநலச் சங்கங்கள் அல்லது தேசியப் பூங்காக் கழகத்திற்குத் தகவல் தருவோம் என்று கூறினர்.