சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்புக் கண்காணிப்பு அமைப்பின் மேற்பார்வை வரம்பை விரிவுபடுத்துவது தொடர்பான மசோதா, மே 7ஆம் தேதி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது.
நாட்டிற்கு முக்கியமானதாகவும் இணையத் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய அபாயம் அதிகமுள்ளதாகவும் இருக்கும் கணினிக் கட்டமைப்பை மேம்பட்ட முறையில் கண்காணிக்க இந்தச் சட்டத் திருத்தம் உதவும்.
தடுப்பூசி விநியோகம் அல்லது முக்கிய அனைத்துலக உச்சநிலை மாநாடுகளை ஏற்று நடத்துதல் போன்றவை தொடர்பில் நிறுவப்படும் தற்காலிகக் கணினிக் கட்டமைப்புகளுக்கும் இது பொருந்தும்.
எடுத்துக்காட்டாக, கொவிட்-19 கிருமிப் பரவலின்போது, பல நாடுகளின் அரசாங்கங்கள் தடுப்பூசி விநியோகத்திற்காகத் தற்காலிகக் கணினிக் கட்டமைப்புகளை நிறுவின. அவற்றில் பெரும்பாலானவை மோசடிக்காரர்களின் இலக்குகளுக்கு உள்ளாயின என்று தொடர்பு, தகவல் மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி நாடாளுமன்றத்தில் கூறினார்.
அதிகரிக்கும் மின்னிலக்கமயமாதலுக்கு இடையே மிரட்டல்கள் அதிகரிக்கும் நிலையில், சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பு விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
2018ஆம் ஆண்டு நடப்புக்கு வந்த இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவது இதுவே முதல்முறை. திருத்த மசோதா பற்றி எடுத்துரைத்த டாக்டர் ஜனில், தொழில்நுட்ப, வர்த்தக மாதிரிகள் மாறிவரும் நிலையில் அவற்றுக்குப் பொருத்தமாக விளங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டியது அவசியம் என்றார்.
“இணையப் பாதுகாப்புச் சட்டம் வரையப்பட்டபோது, ‘சிஐஐ’ எனப்படும் முக்கியத் தகவல் கட்டமைப்புகள் அவற்றின் உரிமையாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் நிறுவப்படுவதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால் மேகக் கணிமைச் சேவைகள் அறிமுகமான பிறகு இந்த நிலை மாறிவிட்டது,” என்றார் டாக்டர் ஜனில்.
இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் செய்யப்படும் திருத்தத்தின்கீழ், சிங்கப்பூரில் சிஐஐ கட்டமைப்புச் சேவை வழங்குவோர், தங்கள் வளாகத்திலோ விநியோகக் கட்டமைப்பிலோ இணையத் தாக்குதல் சம்பவங்கள் நடந்தால் அதுகுறித்துத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள்மீது குற்றவியல் மற்றும் சிவில் அபராதம் விதிக்கப்படலாம் என்று டாக்டர் ஜனில் கூறினார்.
இணையப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா, மூன்று மணி நேரம் நீடித்த விவாதத்திற்குப் பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டது.