கட்டணம் குறைவான கீழ் பிரிவிலிருந்து (வார்டு) கட்டணம் கூடிய உயர் பிரிவுக்கு மாற விரும்பும் நோயாளிகள், அதிக மானியம் அளிக்கப்படும் குறைந்த கட்டணப் பிரிவுக்கு அதிகம் கட்டணம் செலுத்த வேண்டும்.
அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை போன்ற கட்டணம் கூடிய சிகிச்சைகளுக்கு அதிக மானியங்களைப் பெற, நோயாளிகள் முதலில் மருத்துவமனைகளில் கீழ் பிரிவு படுக்கையைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை முடிந்தவுடன் உயர் பிரிவு படுக்கைக்கு மாற அரசாங்கம் ஊக்குவிக்காது என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கூறினார்.
இந்த நோயாளிகளில் பலர் குறைந்த வருமானக்காரர்கள் அல்லர். தொடக்கத்தில் இருந்தே உயர் கட்டணப் பிரிவைத் தேர்வு செய்திருக்க முடியும் என்றார் அவர். எனவே, ஒரு நோயாளி படுக்கைப் பிரிவை மேம்படுத்திக்கொண்டால், மானிய அளவு பின்னோக்கி சரிசெய்யப்படும் என்று அவர் கூறினார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வெய் நிங், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் ஆகியோரின் கேள்விகளுக்குத் அமைச்சர் ஓங் பதிலளித்தார்.
ஏப்ரல் மாதத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் கடித பக்க பதிலில், நோயாளி உயர் மற்றும் கீழ் பிரிவு படுக்கைகளுக்கு மாறும்போது, பின்னோக்கி கட்டணம் வசூலிப்பது குறித்து சுகாதார அமைச்சு விளக்கமளித்திருந்தது.
‘சி’ வகுப்பு நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தம் வயதான தாய், ‘ஏ1’ பிரிவுக்கு மாறும்போது, முந்தைய சிகிச்சைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது நியாயமற்றது என்று ஒரு வாசகர் எழுதியிருந்தார். இதன்படி, அவருடைய தாயார் முன்னர் தங்கியிருந்த ‘சி’ பிரிவு படுக்கைக்கான கட்டணம் ‘ஏ1’ பிரிவு படுக்கை கட்டணமாக சரிசெய்யப்படும். இது செலுத்த வேண்டிய தொகையை இரட்டிப்பாக்கும் என்று அந்த வாசகர் எழுதியிருந்தார்.
உயர் பிரிவில் தங்கி, பின்னர் கீழ் பிரிவுக்கு மாறும் நோயாளிகளைப் பொறுத்தவரை, அவர்கள் அந்தந்தப் பிரிவின் அடிப்படையில் மானியங்களைப் பெறுவார்கள் என்று அமைச்சர் ஓங் கூறினார்.
“இது நியாயமானது. சிக்கல்கள் அல்லது எதிர்பாராத கூடுதல் செலவினால் கட்டுப்படியாகாத நிலை காரணமாக தரம் குறைப்பதற்கான கோரிக்கை இருக்கும்பட்சத்தில், பொது மருத்துவமனைகள் இந்த நோயாளிகளுக்கு நிதி ரீதியாக ஆதரவளிப்பதற்கான வழிகளைக் கண்டறியும்,” என்றார் அவர்.