கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது தொடர்பாக சிங்கப்பூரில் பதிவான ஆகப் பெரிய வழக்கில் ($3 பில்லியனுக்கும் அதிகமான தொகை), குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட இருவர் மே 6ஆம் தேதியன்று கம்போடியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய கம்போடியர்களான சூ வென்சியாங், வாங் பாவ்சென் ஆகிய இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் ஏப்ரல் மாதத்தில் 13 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இருவரும் கம்போடியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதற்கான காரணத்தை குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவிக்கவில்லை.
கள்ளப்பணம் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காவல்துறையினர் சிங்கப்பூரெங்கும் உள்ள பல இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
இதில் கைது செய்யப்பட்ட 10 பேரில் சூவும் வாங்கும் அடங்குவர்.
இந்த வழக்குடன் தொடர்புடைய $3 பில்லியன் மேல் பெறுமானமுள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.