கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கரிமச் சேவைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களின் மூலம் குறிப்பிடத்தக்க வகையில் சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெள்ளிக்கிழமையன்று (மே 3) கூறினார்.
சுவிட்சர்லாந்தில் நடக்கும் செயின்ட் கேலன் கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ள டாக்டர் டான், செய்தியாளர்களிடம் உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.
இது செயின்ட் கேலன் பல்கலைக்கழக மாணவர்களால் ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெறும் கருத்தரங்கம் ஆகும். இந்தக் கருத்தரங்கில் பொருளியல், அரசியல், சமூக முன்னேற்றங்கள் குறித்துத் தலைமுறைகளுக்கு இடையேயான விவாதங்கள் நடைபெறும்.
“வரும் ஐந்து முதல் 10 ஆண்டுகளில், இந்தக் குறிப்பிட்ட துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இத்துறையில் வேலைகள் பெற சிங்கப்பூரர்களுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக நாங்கள் எண்ணுகிறோம்.
“உண்மையில், நீடித்த நிலைத்தன்மை என்பது எங்களுக்கு எப்போதும் நிலைத்திருப்பது. அதாவது, நாம் செய்யும் அனைத்தும் ஆற்றலைப் பொறுத்தது,” என்றார் திரு டான்.
மின்சாரத்தின் ஓட்டத்தை மேம்படுத்த நுண்ணறி மின்வலைகளை உருவாக்கும் நீடித்த நிலைத்தன்மை அதிகாரிகள், கரிமக் கணக்குத் தணிக்கையாளர், பொறியாளர்கள் ஆகிய பதவிகளுக்கு நீடித்த நிலைத்தன்மைத் துறையில் தேவை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
ஃபியூச்சர் எனர்ஜி ஃபண்ட் எனப்படும் குறைந்த கரிம வெளியேற்றத்தால் தயாரிக்கப்படும் மின்சாரப் பயன்பாட்டுக்கு சிங்கப்பூர் மாறுவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக $5 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக திரு டான் தெரிவித்தார்.