சிங்கப்பூரில் இரண்டு பதின்மவயது ஆடவர்களை வெவ்வேறு சம்பவங்களில் மானபங்கம் செய்த சந்தேகத்தில் 71 வயது ஆடவர் மீது மே 6ஆம் தேதி (திங்கட்கிழமை) குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
கடந்த ஆண்டு மே 17ஆம் தேதி ஆடவர் பொதுப் பேருந்தில் பயணம் செய்த போது 18 வயது இளையரை மானபங்கம் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மே 20ஆம் தேதி அதே ஆடவர் ரயிலில் பயணம் செய்தபோது 15 வயது இளையரை மானபங்கம் செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இது தவிர திங்கட்கிழமை மேலும் 8 பேர் மீது மானபங்கக் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படவுள்ளன என்று காவல்துறை தெரிவித்தது.
அவர்களின் வயது 26 முதல் 68 வயதுக்கு உட்பட்டது.
குற்றஞ்சாட்டப்படவுள்ள ஆடவர்கள் பொது இடங்களில் பெண்களையும் ஆண்களையும் மானபங்கம் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
மானபங்கம் தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது மூன்று தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படலாம்.
பொது போக்குவரத்துச் சேவைகளில் மானபங்கம் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விளம்பரங்களையும் அறிவிப்புகளையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.