இந்தியாவில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து அனைத்து சிங்கப்பூரர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் தம் துணைவியாருடன் சிறப்பு விருந்தினராகத் திரு தர்மன் கலந்துகொண்டார்.
“இந்தியா அல்லது இதர நாடுகளுக்கும் சென்று, இந்தியத் தொழில்களுக்கு அப்பாற்பட்டு, இதர தொழில்களுடனும் இணையும் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும். இது சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைக்கு மட்டும் பொருந்தாது. நம் நாட்டில் செயல்படும் மற்ற தொழிற்சங்கங்களும், தொழிற்சபைகளும் அவ்வாறு பின்பற்ற வேண்டும். அப்போதுதான் சிங்கப்பூரின் அடையாளத்தை நாம் மற்ற நாடுகளுக்கும் பரப்ப முடியும்.” என்று அதிபர் தமது உரையின்போது வலியுறுத்தினார்.
சனிக்கிழமை மாலை ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 500 பேர் கலந்துகொண்டனர்.
“சிங்கப்பூரில் இயங்கிவரும் இந்தியத் தொழில்களின் அனைத்துப் பகுதிகளையும் இந்தியாவில் இருக்கும் பல்வேறு வேர்களுடன் ஒன்றிணைப்பது சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் முக்கியப் பங்காகும்,” என்பதையும் திரு தர்மன் தமது உரையில் குறிப்பிட்டார்.
“வருங்காலத்தில் நம் சபை உலகமயமாதல், நீடித்த நிலைத்தன்மை, மின்னிலக்கமயமாதல் ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தும். மற்ற நாடுகளுடன் கைகோத்து, தொழிற்பயணங்கள் அதிகமாக ஏற்பாடு செய்யப்படும். குறிப்பாக, இந்தியாவில் இருக்கும் சில மாநிலங்கள், அண்டை நாடுகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
“நம் உறுப்பினர்கள் தொழில்களில் சந்திக்கும் சவால்களை ஒட்டி கலந்துரையாட நாம் தொடர்ந்து அமர்வுகளை ஏற்பாடு செய்து வருவோம். அடுத்த தலைமுறைத் தொழில் தலைவர்களை உருவாக்கும் முயற்சியில், நம் சபை இந்திய இளையர்களுக்கு சிண்டா, சிங்கப்பூர் இந்திய கல்வி அறநிதி ஆகிய அமைப்புகள் மூலம் உபகாரச் சம்பளங்களையும் வழங்கி வருகிறது.” என்று சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் தலைவர் நீல் பரேக் கூறினார்.
ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக விருது விழா இடம்பெற்றது. ஐந்து பிரிவுகளில் மொத்தம் 24 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 64 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடைக்கு முன்மாதிரிச் சேவை விருது வழங்கப்பட்டது.