உட்லண்ட்சின் சில பகுதிகளில் சனிக்கிழமை மழை வெளுத்துக் கொண்டிருந்த நிலையில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அங்கிருக்கும் குடியிருப்பாளர்களிடம் மலாய் மொழியில் மழை பெய்யுமுன் குடையுடன் தயாராக இருங்கள் என்று கூறினார்.
உட்லண்ட்ஸ் நகர நோன்புப் பெருநாள் பொது வரவேற்பு தினத்தன்று கம்போங் அட்மிரல்டியில் செம்பவாங் குழுத் தொகுதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 2,000 குடியிருப்பாளர்களிடம் அமைச்சர் உரையாற்றினார்.
ஹெல்தியர் எஸ்ஜி என்ற தேசிய ஆரோக்கியமான வாழ்க்கைமுறைத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அந்தத் திட்டத்தின் மூலம் நோய் வராமல் பாதுகாப்பதை ஊக்குவிக்கவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நடுவே பேசிய அமைச்சர் இதுவரை ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தில் 870,000 பேர் பதிந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவர்களில் 77,000 பேர் மலாய் /முஸ்லிம் குடியிருப்பாளர்கள் என்று கூறினார்.
“ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மக்கள்தொகையில் 40 வயதுக்கு மேற்பட்டோரில் ஏறத்தாழ 37 விழுக்காட்டினர் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். இதில் மலாய்/முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 30 விழுக்காட்டினர். அப்படிப் பார்த்தால் தேசிய சராசரியைவிடக் குறைவு. ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய எண்ணிக்கைதான்,” என்று அமைச்சர் ஓங் விளக்கினார்.